அது நானில்லை AI மூலமாக முன்னெடுக்கப்படும் மோசடி!
மஹேல ஜெயவர்தனவின் படத்தையும் குரலையும் ஏஐ மூலம் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, தனது படத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி நிதி முதலீட்டு விளம்பரங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் இந்த காணொளிகள் முற்றிலும் போலியானவை என்றும், அவர் எந்த நிதி முதலீட்டுத் திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி செய்பவர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மஹேலவின் படத்தையும் குரலையும் மிகவும் யதார்த்தமான முறையில் உருவகப்படுத்தியுள்ளதால், அவை பொதுமக்களுக்கு உண்மையான காணொளிகளாகத் தோன்றலாம்.
இந்தநிலையில் சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, பின்வரும் பண்புகள் இதுபோன்ற மோசடி விளம்பரங்களை அடையாளம் காண உதவுகின்றன.
அதன்படி, காணொளியில் உள்ள முகபாவனைகள் இயற்கைக்கு மாறானவை அல்லது உதடு அசைவுக்கும் குரலுக்கும் இடையில் பொருந்தாத தன்மை, மிகக் குறுகிய காலத்தில் நிறையப் பணம் சம்பாதிப்பதாக வாக்குறுதிகள், "இப்போதே முதலீடு செய்யுங்கள்" போன்ற செய்திகள் மூலம் நபரை பதற்றப்படுத்துதல், அதிகாரப்பூர்வ வலைத்தளங்களுக்குப் பதிலாக WhatsApp அல்லது பிற தனியார் செய்தி சேவைகள் மூலம் இணைக்கக் கோருதல் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல் அல்லது OTP எண்கள் போன்ற இரகசியத் தரவைக் கோருதல் போன்றவை இதில் அடங்கும்.
எனவே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான விளம்பரத்தைக் கண்டால், அந்த நபரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளைச் சரிபார்க்கவும், எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வழங்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
What's Your Reaction?



