விழா மேடையில் அதிபரின் பிழைகளை சுட்டி காட்டிய மாணவி-சமூக வலைத்தளங்களில் பேசுபொருள்
சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அந்தப் பாடசாலையின் அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளது.
குறித்த நிகழ்வின் போது மாணவி ஒருவர் மேடையில் பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
ஒத்திகைகளில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்திற்காகத் தனக்கு வழங்கப்பட வேண்டிய விருது மறுக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்தது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி அதிபரிடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன், அதனை ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாடசாலையின் பழைய மாணவியர் சங்கம் (OGA) இந்த விவகாரத்தில் முறையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?



