மனைவியை சட்டத்தரணியாக்க பணம் திரட்ட போதைப்பொருள் கடத்தல்: ஆசிரியையும் கணவரும் கைது
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் 25 வயதுடைய தனது மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டும் நோக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணவரும், அந்த ஆசிரியையும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான "ஐஸ்" போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான கணவரிடமிருந்து 1 கிலோ 6 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மனைவியிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வேன் ஒன்றைப் பயன்படுத்தி மாதாம்பிட்டிய பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாதாம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் ஸ்ரீயந்தவின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மதஸ்தலம் ஒன்றிற்கு அருகில் வைத்து தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வெலிசர பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதாம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?



