மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏழாவது நிர்வாகக் குழுவின் பதவியேற்பும் , பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவியும் ஜுலை 19 இல்

SaiSai
Jul 11, 2026 - 15:57
Jul 11, 2026 - 15:58
 0  178
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏழாவது நிர்வாகக் குழுவின் பதவியேற்பும் , பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவியும் ஜுலை 19 இல்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிர்வாக சபை பொறுப்பேற்பும் பல்கலை. மாணவர்களுக்கான நிதியுதவியும்

செயலாளர் ஏகாம்பரம் அறிவிப்பு

"மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி" எனும் கல்விப் புரட்சியின் புதிய அத்தியாயத்தின் கீழ் 

மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை தன்னுடைய உயரிய சமூகப் பொறுப்பாகக் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளாக இடையறாது பணியாற்றி வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிர்வாக சபை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வும், பொருளாதார வசதி குறைந்த மலையக பிரதேச பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஐந்தாண்டு புலமைப்பரிசில் நிதியுதவித் திட்டத்தின் அடுத்த கட்ட நிகழ்வும் எதிர்வரும் 19 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு – 11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மன்றத்தின் செயலாளர் வீ.பி.ஏகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி" என்பது ஒரு முழக்கம் மட்டுமல்ல; அது மலையக சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நீண்டகால கல்வி இலட்சியமாகும். பொருளாதார பின்னடைவு காரணமாக எந்த மாணவரும் தனது உயர்கல்விக் கனவை கைவிட்டுவிடக் கூடாது என்பதே மன்றத்தின் உறுதியான நோக்கமாகும்.

அந்த உயரிய இலக்கை நோக்கி கடந்த இருபது ஆண்டுகளாக மன்றம் பல்வேறு கல்விசார் பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறது. ஆண்டுதோறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தரமான மாதிரி வினாத்தாள்கள் தயாரித்து வழங்கப்படுவதுடன், முன்னோடி பரீட்சைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பனவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப் பயணத்தின் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக, பொருளாதார வசதி குறைந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்காக ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான நிதியுதவியை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் புதிய மாணவர்களுக்கான உதவி திட்டம் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. உயர்கல்வியைத் தொடரும் திறமையான மலையக மாணவர்களுக்கு உறுதியான ஆதரவின் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் அமையும் என மன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மன்றத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிவொளி முன்னோடி வினாத்தாளும் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. பரீட்சை முறையை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் தயாராகும் வகையில் கல்வியியல் நிபுணர்களின் ஆலோசனையுடன் இவ்வினாத்தாள்கள் இம்முறையும் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், நன்கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலையக மாணவர்களின் கல்விப் பயணத்தில் சமூகத்தின் ஒவ்வொரு நலன்விரும்பியும் பங்காளியாக இணைய வேண்டிய தருணம் இது என மன்றம் வலியுறுத்துகிறது. ஒரு மாணவரின் கல்வியில் செய்யப்படும் முதலீடு ஒரு குடும்பத்தையே உயர்த்துவதோடு, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றும் என்பதை மன்றம் நம்புகிறது.

ஆகவே, கல்வியை சமூக மாற்றத்திற்கான மிகப்பெரிய சக்தியாகக் கருதும் மன்றத்தின் உறுப்பினர்கள் நன்கொடையாளர்கள், தொழில்துறையினர், முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் மனிதநேய உள்ளங்கள் அனைவரும் இந்தப் பணியில் கைகோர்க்குமாறு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் அன்புடன் அழைப்பு விடுக்கிறது.

மலையகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உயர்கல்வியின் ஒளி பரவ வேண்டும்; திறமைக்கும் வாய்ப்புக்கும் இடையிலான பொருளாதாரத் தடைகள் அகல வேண்டும்; கல்வி வாயிலாக ரதன்னம்பிக்கையும் சமூக முன்னேற்றமும் மலர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி, மலையகக் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமையும் என்ற உறுதியை மன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

– ஊடகப் பிரிவு

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow