போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – ஐவர் கைது
போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போது, டுபாயில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 10 ஒப்பந்தங்கள், விண்ணப்பதாரர்களின் 27 விண்ணப்பப் படிவங்கள், போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், அரச பாடசாலை அதிபர்கள், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அரச அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பெயர்களில் போலித்தனமாகத் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான உத்தியோகபூர்வ இலச்சினைகள் (Seals) மீட்கப்பட்டுள்ளன.
இதனுடன், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாடசாலை விலகல் சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?



