குற்றவாளி தப்பிக்க போலி கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டு – ஜனாதிபதி செயலக அதிகாரி கைது
ஜனாதிபதி செயலக சிரேஷ்ட
உதவிச் செயலாளர் கைது
- குற்றவாளி நாட்டை விட்டு தப்ப போலி கடவுச்சீட்டு பெற்றுக் கொடுத்தார்
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினல் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் உதவி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய குறித்த அதிகாரி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக போலியான கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக, மற்றொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று மாலை (26) கைது செய்யப்பட்டார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக கைதான கண்டியைச் சேர்ந்த, 41 வயதான குறித்த சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவின் துணை கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியபோது இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
What's Your Reaction?



